காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் வடக்கு , கிழக்கினைச் சேர்ந்த காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 30 பேர் கலந்து கொண்டிருந்ததாக நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினைகளை அறிந்து, அது தொடர்பில் எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக நல்லிணக்க அமைச்சு தெரிவித்தது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறைத்து வைத்துள்ளதாகக் கூறப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படுமிடத்து, அது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களில் எவரேனும் வௌிநாடுகளில் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பின், அது தொடர்பில் தெரியப்படுத்தும் பட்சத்தில் தூதரகங்கள் ஊடாக தேடிப்பார்க்க முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாக நல்லிணக்க அமைச்சு தெரிவித்தது.
நல்லாட்சி அரசாங்கக்காலத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட எவரும் காணாமற்போனதாக முறைப்பாடுகள் கிடைக்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.