துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: ஏழ்வர் கைது



திவுலப்பிட்டிய - கேன்பிடகெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இதன்போது ஏழ்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

தகவல் கிடைக்கப் பெற்றதும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். 

அங்கு வேன் ஒன்றுக்கு முன்னால் இரு சந்தேகநபர்களும், வேனுக்குள் ஆறு பேரும் இருந்துள்ளனர். 

இந்தநிலையில், வீதியில் நின்று கொண்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதையடுத்து, அதிரடிப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பலியாகியுள்ளார். 

இவர் கடற்படையில் கடமையாற்றிய முன்னாள் அதிகாரி என தெரியவந்துள்ளது. 

மற்றைய ஏழ்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய வேனில் இருந்து கைக்குண்டுகள், துப்பாக்கிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.