கிராம உத்தியோகத்தரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது



மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கிராம உத்தியோகத்தர்  பிரிவில் கடமையாற்றிவந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தரின் சடலம், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு  அமைவாக இன்று (31) தோண்டி எடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு, மகிலூரைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தரான சோமசுந்தரம் விக்னேஸ்வரனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள், களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், மரணமடைந்தவரின் உறவினர்களால் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக, கடந்த 28ஆம் திகதி ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வான், குறித்த சடலத்தைத் தோண்டி எடுத்து விசேட பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்குமாறு, உத்தரவு பிறப்பித்திருந்தார்.
குறித்த நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாக நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் இன்று (31) எருவில் மயானத்திலிருந்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டதுடன், சம்பவ இடத்துக்கு களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி இரவு, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த உத்தியோகத்தர், மகிழுர்முனையில் உள்ள குறுக்கு வீதியில் மின்சாரத் தூண் ஒன்றில் மோதிய நிலையில்சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.