கல்முனை உள்ளூராட்சி மன்றத்தை இருவேறு பிரிவுகளாக பிரிக்க வேண்டாம் என வலியுறுத்தி கல்முனையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பிரிக்கப்படுமாயின் நான்கு அலகுகளாக பிரித்தல் வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கல்முனை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்புப் பேரணி, முஸ்லிம் பிரதேச செயலகம் வரை சென்றடைந்துள்ளது.
இதன்போது பிரதேச செயலாளரிடம் மஹஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் கல்முனை மாநகரசபையின் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் எல்லை நிர்ணயத்திற்கு அமைய, கல்முனை மாநகர சபையை கல்முனை மற்றும் சாய்ந்தமருது நகர சபைகளாக பிரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே கல்முனையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை – சாய்ந்தமருது பகுதிக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
அக்கரைப்பற்று – மட்டக்களப்பு பிரதான வீதியில் சாய்ந்தமருது பகுதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக பிரதான வீதியுடனான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.


Post a Comment
Post a Comment