மண் மேட்டில் மோதிய முச்சக்கர வண்டி



லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டப் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விபத்து இன்று மதியம் 2 மணியளவில் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை லோகி தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. 

பாமஸ்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த முச்சக்கரவண்டியில் சாரதியும் மற்றுமொருவரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.