வாகரையில் புலமைப்பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கல்



கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட வாகரைக் கல்விக் கோட்டத்தில் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அவுஸ்ரேலியா அன்பாலயம் அமைப்பினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் புதன்கிழமை இடம்பெற்றது. 

வாகரை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி கலந்து கொண்டார். 

மேலும் அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிவசங்கரி கங்கேஸ்வரன், கோறளைப்பற்று சமூக மேம்பாட்டு அமைப்பின் செயலாளரும், சமூக சேவையாளருமான க.கமலநேசன், வம்மிவட்டவான் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.இந்திரன், கண்டலடி அருந்ததி வித்தியாலய அதிபர் எஸ்.மோகனசுந்தரம், வட்டவான் கலைமகள் வித்தியாலய அதிபர் எஸ்.மகாலிங்கம், கற்பித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 

இதன்போது வாகரைக் கல்விக் கோட்டத்தில் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற ஏழு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கற்பித்த ஆசிரியர்கள், அதிதிகள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். 

ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் வம்மிவட்டவான் வித்தியாலயத்தின் மாணவன் ச.நிலக்சன் (175 புள்ளிகளையும்), வட்டவான் கலைமகள் வித்தியாலய மாணவன் ப.பதுசாந் (165 புள்ளிகளையும்), வாகரை மகா வித்தியாலய மாணவி தே.கபிநயா (169 புள்ளிகளையும்), வாகரை மகா வித்தியாலய மாணவி க.டிலுக்சிகா (160 புள்ளிகளையும்), தட்டுமுனை மாணிக்க விநாயகர் வித்தியாலய மாணவன் ச.மிதுர்சன் (160 புள்ளிகளையும்), கண்டலடி அருந்ததி வித்தியாலய மாணவி சி.ஜினுஸ்கா (166 புள்ளிகளையும்), கண்டலடி அருந்ததி வித்தியாலய மாணவி அ.மதுசியா (156 புள்ளிகளையும்), பெற்று சித்தியடைந்தனர். 

வாகரைப் கல்விக் கோட்டமானது கடந்த கால யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட கோட்டமாக இருந்ததுடன் காணப்படுவதுடன், மாணவர்களின் கல்வி மட்டம் தற்போது உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.