பிள்ளையான் தொடர்பான வழக்கு ஜனவரி மாதத்திற்கு



கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 07 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவர் தேடப்பட்டுவரும் நிலையில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். 

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று இரண்டாவது நாளாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி இர்சடீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இரண்டாம் நாள் அமர்வான இன்றைய அமர்விலும் முன்னாள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியும் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான எம்.என். அப்துல்லா மற்றும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்டபோது பதிவுகளை மேற்கொண்ட சுருக்கெழுத்து மற்றும் தட்டெழுத்தாளர்கள் இருவர் மன்றில் ஆஜராகி சாட்சியங்களை பதிவுசெய்தார். 

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்களான பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகியோர் வழங்கியுள்ள குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இதனடிப்படையில் சாட்சியங்களை பதிவு செய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்றம், ஜனவரி 3,4,8,9 ஆகிய திகதிகளில் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவித்துடன், அன்றைய தினம் அனைத்து சந்தேக நபர்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டது. 

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்தின் போது அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்திருந்தனர்.