பயணிகள் பஸ் புரண்டது,ஆற்றினுள்




(க.கிஷாந்தன்)
இரத்தினபுரி ஹம்பிலிபிட்டிய பிரதான வீதியில் இரத்தினபுரி பத்துல்பஹன பகுதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 44 பேர் படுங்காயம்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி பத்துல்பஹன பகுதியில் 23.12.2017 அன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊருபொக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பஸ் வீதியை விட்டு விலகிச் சென்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து தொடங்கொட வாவியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
படுங்காயமடைந்தவர்களுள் 41 பேர் இரத்தினபுரி வைத்தியசாலையிலும், மூன்று பேர் கஹவத்தை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிறு குழந்தையொன்றும் உள்ளதாகவும், விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் 60 பயணிகள் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.