கல்குடா SLFP வேட்பாளர்கள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவைச் சந்திப்பு



எம்.ஐ. அஸ்பாக்
கல்குடா தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கெளரவ இராஜாங்க அமைச்சருமான MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களை 23.12.2017 சனிக்கிழமை ஜெயந்தியாயவில் அமைக்கப்பட்டுள்ள “மட்டக்களப்பு பல்கலைக்கழக” கேட்போர் கூடத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடாத்தினர்.
இந்நிகழ்வு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது கருத்துத் தெரிவித்த வேட்பாளர்கள் தாங்கள் முன்வைத்த காலை ஒரு போதும் பின்வைக்கப் போவதில்லை என்றும், யாருக்கும் எப்பொழுதும் விலை போக மாட்டோம் என்றும், வெற்றி தோல்வி எதுவாக இருப்பினும் தாங்கள் மனப்பூர்வமாக அதனை ஏற்றுக் கொள்ளத் தயார் எனவும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
மேலும் இதன் போது அமைப்பாளர் MMS. ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் எமக்குத் தேவையானதெல்லாம் நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், கெளரவ அமைச்சர் அவர்களின் அயராத முயற்சியால் நிர்மாணிக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழத்தினுளும் அதிகளவான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும். மேலும் தேர்தல் முடிவுற்றதும் சாத்தியமான வெற்றுடங்களை நிரப்பும் வகையில் வேலை வாய்ப்புக்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கெளரவ அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ‘இந்தத் தேர்தலைப் பொருத்த வரைக்கும் நாங்கள் யாரையும் குறை கூறுவதோ, ஏசுவதோ ஏனைய கட்சிகளை விமர்சிப்பதோ அவசியமில்லை. கண்டிப்பாக அவ்வாறான செயல்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், குறிப்பாக பொலித்தீன்களைப் பயண்படுத்தி கொடிகள் கட்டுவதையோ கிளைகளை அலங்கரிப்பதையோ முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும் நாங்கள் போட்டியிடும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஒரு பலமிக்க நமது நாட்டின் ஜானாதிபதியை தலைவராகக் கொண்ட கட்சியாகும். இன்ஷா அல்லாஹ் தேர்தல் முடிந்ததன் பிற்பாடு உடனடியாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு விடயத்தில் தான் கவணம் செலுத்துவேன். என்றும் குறிப்பாக மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் சாத்தியமான அளவு இளைஞர்களை உள்வாங்க முடியும் எனவும் தெரிவித்தார்.