எம்.எல்.எஸ்.டீன்
அக்கரைப்பற்று, அல் ஹிதாயா பாடசாலையில் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள தரம் ஒன்று மாணவர்களுடன் பெற்றோர்கள் இணைந்து, பாடசாலை சுற்றுவட்டார மாணவர்களை, ஏனைய பாடசாலைகளில் அனுமதிக்க வேண்டாமெனக் கூறி, அப்பாடசாலைக்கு முன்னால் நேற்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று அல் ஹிதாயா பாடசாலை சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவர்களை, வேறு பாடசாலைகளுக்கு அனுமதிப்பதில்லையென, அக்கரைப்பற்று ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்தில் கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் மீறி, இவ்வாண்டு வேறு பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொண்டமையால் இப்பாடசாலையில் மாணவர்களின் அனுமதி மிகவும் குறைந்துள்ளது.
அதுமாத்திரமன்றி, இவ்வாறு அனுமதிகள் குறைந்து கொண்டு செல்வதால் காலப்போக்கில் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, பாடசாலை மூடப்படக் கூடிய சூழலும் உருவாகி வருகின்றது.
இது விடயமாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரிடம் முறையிட்ட போதிலும் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதுடன், உடனடியாக வலயக் கல்விப் பணிப்பாளர் தலையிட்டு, தீர்வு பெற்றுத்தர வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தினர்.
தமது தரம் ஒன்று மாணவர்களுடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், தரம் ஒன்றுக்கான வித்தியாரம்ப நிகழ்வையும் பகிஷ்கரித்து, வீடு சென்றனர்.


Post a Comment
Post a Comment