இலங்கை மின்சார சபை ஊழியர்களால் தலைவர் தடுத்து வைப்பு



இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்பை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஊழியர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஒன்றிணைந்த மின்சார சபை தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.
சம்பள உயர்விற்கு அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சு தெரிவித்துள்ளது.
பொறியியல்துறை சார்ந்தவர்களுக்கே சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.