‘வன்முறையற்ற தேர்தலுக்கு வழிகோலவும்’



எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அமைதியாகவும் சுமூகமானதாகவும் வன்முறையற்ற தேர்தலாக நடத்தி, சிறந்த முறையில் முடிவுகளைப் பெற்றுக்கொள்ள  உதவுமாறு, அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலிக விக்ரமரத்தின வேண்டுகோள் விடுத்தார்.
அனைத்து அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் பொது அமைப்புகளிடம், அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.  
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அக்கரைப்பற்று மாநகர சபை, பிரதேச சபை ஆகியவற்றின் அபேசட்கர்கள் மற்றும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாயல்களின் சம்மேளனம் அகியோருக்கு, தேர்தல் விதிமுறை தொடர்பிலான விளக்கம், அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில், நேற்று (10) இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொண்டு விளக்கமளித்த போதே, மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர், மேற்குறிப்பிட்ட வேண்டுகோளை முன்வைத்தார்.
அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில்,
“புதிய தேர்தல் முறையில் இடம்பெறும் கலப்புமுறை மற்றும் விகிதாசார தேர்தல் முறையின் கீழ், இலங்கையில் ஆகக்குறைந்த வட்டாரங்களைக் கொண்ட ஒரு பிரதேச சபையாக, அக்கரைப்பற்று பிரதேச சபை காணப்படுகின்றது.
“இப்புதிய தேர்தல் முறைமைகள் பற்றி அபேட்சகர்கள் முறையாக விளங்கிக் கொண்டு செயல்படும் போதே, மக்களுக்கு எதிர்காலத்திட்டங்கள், வரப்பிரசாதங்கள் மற்றும் பாதிப்புகள் பற்றி விளக்கமளிக்க முடியும்.
“பெருங் கூட்டங்கள், ஊர்வலங்கள், வீண் செலவினங்களைத் தவிர்த்து, 10 பேருக்கு உட்பட்ட குழுவாக வீடு, வீடாகச் சென்று பிரசாரங்களை நடத்துவதும் மக்களைத் தெளிவூட்டுவதும், தமது கொள்கைகள், எதிர்கால நடவடிக்கைகளை எடுத்துக் கூறுவது நன்மை பயக்கக் கூடியதாக அமையும்.
“தேவையற்ற பதாதைகள், போஸ்டர்களை பொது இடங்களில் ஒட்டுதல், பொலித்தீன் பாவனை, ஒலிபெருக்கிப் பயன்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்
“மேலும், தேர்தல் பிரசார அலுவலகங்கள் அமைப்பது பற்றி நன்கு அறிந்து கொண்டு, பொலிஸாரினதும் தேர்தல்கடமை அதிகாரிகளினதும் ஆலோசனையின் கீழ் கட்சிகள், அபேட்சகர்கள் செயற்படும் போது, நீதியானதும், வன்முறையற்றதுமான தேர்தலை நடத்த இலகுவாக அமையும்” என்றார்.