பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் கசுன் பாலிசேன, அர்ஜூன் அலோசியஸ் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ஆகியோர் முறிகள் மோசடி சம்பவத்தின் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அறிக்கை மூலம் அவர்கள் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நாட்டிற்கு வருகைதந்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டும் என நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை அர்ஜூன் மகேந்திரனுக்கும் அறிவிக்க வேண்டும் என நீதவான், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் முறிகள் விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை , சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மன்றுக்கு சமர்ப்பித்துள்ளார்.


Post a Comment
Post a Comment