மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு



-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா-
அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால், வேலையற்ற பட்டதாரிகள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை இன்று (21) காலை நடத்தினர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் போது, “பட்டதாரிகளுக்கு நீதி வேண்டும்”, “உடனடியாக அரச தொழில் வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், கிழக்கு மாகாண சபையால் நடத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் 40 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த அனைத்துப் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
“ஒரே மாகாணத்தில், வேறுபட்ட வெட்டுப்புள்ளி எதற்கு?”, “வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே?”, “சமூகத் தலைமைகள் எங்கே?” போன்ற கோஷங்களை, பட்டதாரிகள் இதன்போது எழுப்பினர்.