(க.கிஷாந்தன்)
அட்டன் டிக்கோயா தோட்டத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 34 தனி வீடுகள் கையளிக்கும் நிகழ்வு அட்டன் பிளான்டேசன் குருப் முகாமைத்துவ பணிப்பாளர் வி.கோவிந்தசாமி தலைமையில் 15.02.2018 அன்று மாலை 3.00 மணியளவில் கையளிக்கப்பட்டன.
கடந்த காலங்களில் டிக்கோயா தோட்டத்தில் தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக அத்தோட்டத்தின் செயப்பாடுகள் வலு இழந்ததிற்கு தீர்வு காணும் முகமாக வட்டவளை பகுதியில் மூடப்பட்ட லொனெக் தோட்டத்திலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மேற்படி வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.
புதிதாக அமைக்கப்பட்ட வீடுகள் முற்று முழுவதாக அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதுடன், இவ்வீடுகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், அடிப்படை தளபாடங்களும் இலவசமாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வீடு ஏழு பேச் காணியுடன் ஒரு படுக்கை அறை வரவேற்பறை, சமையலறை, மற்றும் கழிவறை உள்ளடங்களாக அமைக்கப்பட்டுள்ளதுடன் சகல வீடுகளுக்கு குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியனவும் வழங்கப்பட்டுள்ளன.
சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியுடன் அமைக்கப்பட்ட இவ்வீடுகள் கையளிக்கும் நிகழ்வுக்கு தோட்ட முகாமையாளர் மீராஜ் சமரவிக்ரம, முகாமைத்துவ பணிப்பாளர் தினேஸ் பனங்வெல்ல உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த வீடுகள் ஒரு நவீன கிராமமாக அமைக்கப்பட்டிருக்கமை குறிப்பிடதக்கது.


Post a Comment
Post a Comment