விஷேட தேவையுடையோருடன் சந்திப்பு



(அப்துல்சலாம் யாசீம் )

மட்டக்களப்பு  வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட மண்முனை மேற்கு வாழ்வகம் விஷேட தேவையுடையோருக்கான அமைப்பினருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று (20) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தங்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேரத்தை ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்ததையடுத்து ஆளுநரை சந்தித்து கலந்துறையாடி தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து  கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் எஸ்.அருள்ராஜா தெரிவித்தார்.


இக்கலந்துறையாடலின் போது தங்களுடைய அமைப்பில் 567 அங்கத்தவர்கள் இருப்பதாகவும் விஷேட தேவையுடையோருக்கான பாடசாலையொன்றும் தற்காலிக கட்டிடமொன்றில் இயங்கி வருவதாகவும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அத்துடன் கிழக்கு ஆளுநருக்கு மகஜரொன்றினையும் கையளித்தனர். இம்மகஜரில் கடந்த 2007ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு  பதிவு செய்யப்பட்டு  தற்போது 567 அங்கத்தவர்களை கொண்டுள்ளதுடன் அவர்களது மாதாந்த சந்தா பணத்தில் எமது சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

எமது அமைப்பானது ஒரு நிரந்தர கட்டிடம் கூட இல்லாமல் பல சிரமங்களுக்கு மத்தியில் தற்காலிக கட்டிடத்தில் ஒரு மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்காக ஒரு பாடசாலையையும் நடாத்தி வருகின்றோம். 

அச்சிறுவர்களுக்கு விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் கூட இல்லாத நிலையிலேயே கல்வியினை மேற்கொண்டு வருவதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எமது வாழ்வக அமைப்பில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்த வருமானம் ஈட்டக்கூடிய வகையில் சுயதொழில் வகைகளை வழங்கி அவர்களது வாழ்க்கை முன்னேற்றமடையச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.