சிலாபம் சிறுனின் கொலையுடன் தொடர்புற்றவர்,கைது




சிலாபம், இரணவில பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 10  வயது சிறுவனின் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் கடத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
சமிந்துகம மேற்கு, இரணவில பிரதேசத்தில் வசிக்கும் ஜுவன் பேடிகே சுசித் நிர்மால் எனும் 10 வயது சிறுவன், பெப்ரவரி 25 ஆம் திகதி காணாமல் போன நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு, சமிந்துகம கிராமப் பகுதியிலுள்ள இரணவில காட்டுப் பகுதியில் வைத்து சடலாமாக மீட்கப்பட்டிருந்தான்.
காணாமல் போன சிறுவன், சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவருடன் சென்றிருந்ததோடு, அவர் அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்தது.
இரணவில கிராமத்திற்கு தேங்காய் விற்பதற்காக வரும் குறித்த சந்தேகநபரின், நிரந்தர முகவரி குறித்து எவ்வித தகவலும் இன்றிய நிலையில், சந்தேகநபர் பெப்ரவரி 27 ஆம் திகதி சிலாபத்திலிருந்து சென்றமை தெரியவந்துள்ளது.  அத்துடன் அவர் பாரிய மீன்பிடி வலைகளைக் கொண்ட வாடியில் பணிபுரிந்த ஒருவர் எனும் தகவலும் கிடைத்துள்ளது.
அதனையடுத்து குறித்த நபரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டிருந்தனர். அதற்கமைய குறித்த சந்தேகநபர் இன்று (04) காலை முல்லைத்தீவு, நாயாறு பகுதியிலுள்ள மீனவ கிராமம் ஒன்றில் ஒளிந்திருந்த நிலையில், முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.