இலங்கையில், ஃபேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
கண்டிமாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு காரணமான வெறுப்புணர்வுப் பிரசாரங்களை தடுக்கும் நோக்கிலேயே சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையின் பிரகாரம் வடிகட்டப்படுவதாக இலங்கை தொலைபேசி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சபை கூறியுள்ளது.
வெறுப்புணர்வுப் பிரசாரங்களை கட்டுப்படுத்துவதற்காகவே ஃபேஸ்புக் உட்பட சமூக ஊடகங்களை பல இடங்களில் முடக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனரட்ண செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அதேவேளை ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப் மற்றும் வைபர் ஆகிய வலையமைப்புக்களை இலங்கை தொலைபேசி ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக நாடெங்கிலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் இடையூறுகளை எதிர்கொள்கிறார்கள்.
இதற்கிடையே கண்டி மாவட்டத்தில் பதற்றநிலை தொடர்வதை அடுத்து அங்கு ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
STAN HONDA/AFP/GETTY IMAGES
கண்டி மெனிக்கின்ன பிரதேசத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தமது குடிமக்களுக்கு இலங்கைப் பயணம் குறித்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன.
இலங்கைக்கு பயணிப்பவர்கள் அங்கு, ஆர்ப்பாட்டம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்குமாறு அவை அறிவுறுத்தியுள்ளன.
CARL COURT/GETTY IMAGE
அதேவேளை சுற்றுலாத்துறை நிலவரங்களை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, சுற்றுலா போலீஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்கள் உதவியாக இருப்பார்கள் என்றும் அறிவித்துள்ளது.
பயண முகவர்கள் வெளிநாடுகளுக்கு சரியான விபரங்களை தரவேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மத்தியில் தேவையற்ற பதற்றம் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அது கேட்டுள்ளது.


Post a Comment
Post a Comment