யுவதியின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு: சித்தாண்டியில் சம்பவம்



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஏறாவூர் பொலிஸ் பிரிவு, சித்தாண்டி உதயன்மூலையில் உள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உதயன்மூலைக் கிராமத்தில் வசிக்கும் கே. கலைச்செல்வி (வயது 23) என்பவரின் சடலமே நேற்று (28) சனிக்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டது.
வீட்டு வேலைகளைக் கவனித்து தங்கையையும் பிரத்தியேக வகுப்புக்காக அனுப்பி வைத்தவரே பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தாய் அயலிலுள்ள உறவினரின் வீடு சென்றிருந்ததாகவும் தந்தை வளவைத் துப்புரவு செய்து கொண்டிருந்ததாகவும் பின்னர் தான் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகள் நைலோன் கயிற்றில் தொங்கியவாறு காணப்பட்டதாகவும் தந்தை பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்ட சடலம் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.