திருகோணமலை – லிங்கநகர் வீதியின் நிர்மாணப்பணிகளில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மாகாண வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை – லிங்கநகர் வீதியின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த வீதிக்காக 43 இலட்சத்து 42 ஆயிரத்து 745 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சுமார் 360 மீற்றர் வீதியின் நிர்மாணப்பணிகள் டிசம்பர் மாதம் நிறைவுபெற்றது.
குறித்த கொங்ரீட் வீதியின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே வீதி தரமற்றதாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டியதாகவும் அதிகாரிகள் அதனைப் பொருட்படுத்தவில்லை எனவும் லிங்கநகர் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
லிங்கநகர் வீதி மக்களிடம் கையளிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள்ளேயே வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.
லிங்கநகர் மக்களின் குற்றச்சாட்டு தொடர்பில் திருகோணமலை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளரிடம் வினவியபோது வீதியில் எவ்வித குறைப்பாடுகளும் இல்லை என அவர் கூறினார்.


Post a Comment
Post a Comment