கடந்த மார்ச் 05 இல் கண்டியில் இடம்பெற்ற இன கலவர தாக்குதல் சம்பவம் தொடர்பான, விசாரணைகள் தொடர்பில் மூவரை பொலிஸ் தீவிரவாத தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது.
கடந்த மார்ச் 07 ஆம் திகதி, பூஜாபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதென்ன, வெலேகடயிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது தாக்குதல் நடாத்தியமை மற்றும் அமைதியற்ற வகையில் செயற்பட்டமை தொடர்பில் குறித்த மூவரையும் இன்று (05) கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அம்பதென்ன, கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21, 22, 55 ஆகிய வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, சந்தேகநபர்களை கொழும்பு தீவிரவாத தடுப்பு பிரிவினால், பூஜாபிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான மர ஆலை உள்ளிட்ட பல்வேறு சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் மே 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment