உள்ளாட்சி சபைகளை தரமுயர்த்த நடவடிக்கை



(அப்துல்சலாம் யாசீம்)

கன்தளாய் மற்றும்   மூதூர் பிரதேச சபைகளை நகர சபையாகவும்  திருகோணமலை நகர சபையை மாநகர சபையாக தயமுயர்த்தவுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று இன்று (28) சம்பூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போது திருகோணமலை நகரத்தை  சிங்கப்பூர் நிதியுதவியுடன் பாரிய அளவில் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் அதேபோல் அனைத்து பிரதேச சபைகளிலும் காணப்படுகின்ற வளப்பற்றாக்குறை ஆளணி பற்றாக்குறை போன்றவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகளை பெற்று  அதனை தீர்த்து வைப்பேன் எனவும் கூறினார்.

இதேவேளை எந்த கட்சி பாகுபாடின்றியும், இன மத வேறுபாடின்றியும் பிரதேச சபைகளின் ஊடாக மக்களுக்கு சேவைகளை வழங்க வேண்டுமெனவும்,ஒவ்வொரு வட்டாரங்களிலும் காணப்படுகின்ற மிக முக்கிய பிரச்சினைகளை இணங்கண்டு அவ்வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்குறிய நிதிகளை வழங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம்  முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள்,செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.