மரத்தில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு



(அப்துல்சலாம் யாசீம்)

ஹொரவ்பொத்தானை குளத்திற்குள் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமொன்று நேற்று சனிக்கிழமை மாலை (02) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஹொரவ்பொத்தானை,மெதவாச்சி சந்தியில் வசித்து வந்த போகுல லியனகே சுமேத பெரேரா (31வயது) என்பவருடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- தனது சகோதரரை  காணவில்லையென ஹொரவ்பொத்தானை பொலிஸ் நிலையத்தில் கடந்த 30ம் திகதி சுதந்த பெரேராவினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குளத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமொன்று காணப்படுவதாக வழங்கப்பட்ட தகவலையடுத்து விரைந்த பொலிஸார் சடலத்தை உறவினர்களிடம் காண்பித்து உறுதிப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.

தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலத்தை கெப்பித்திகொள்ளாவ பதில் நீதவான் அஐித் புஸ்பகுமார திஸாநாயக்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் சட்ட வைத்திய பரிசோதனையை முன்னெடுக்குமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

சடலம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.