கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பொறியியலாளராக


( அப்துல்சலாம் யாசீம்) 

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பொறியியலாளராக இஹ்ஸான் ஜவாஸன் பதவியேற்றார்.
'பல்கலைக்கழக பொறியியலாளர்' என்ற பதவிக்கு ஒருவரை மட்டுமே தெரிவு செய்வதற்காக நாடளாவிய ரீதியில் பொறியியலாளர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரிட்சையும் நடத்தப்பட்டது.
சுமார் 40 இற்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள் கலந்து கொண்ட இந்த நேர்முகப்பரிட்சையில் இஹ்ஸான் ஜவாஸன் மட்டுமே தமிழ் மொழி பேசும் முஸ்லிம் பொறியியலாளர் ஆவார்.
இவர் சிவில் பொறியியல் (Civil Engineering), கணிய அளவையியல் (Cost Engineering / Qantity Surveying), கட்டிட வடிவமைப்பு (Architectural Designing) ஆகிய மூன்று பொறியியல் துறைகளில் கடந்த காலங்களில் மேல்படிப்புகளை நிறைவு செய்துள்ளதுடன் கட்டிட பொறியியல் சேவைகள் (Building Services Engineering) துறையிலும் தற்போது பகுதி நேர மேல்படிப்பை தொடர்கிறார்.
இவர் பல்கலைக்கழக பொறியியலாளராக பதவியேற்ற பின்னர் பல்கலைக்கழக ஆலோசனை சபையின் (University Council) தீர்மானத்தில் பேராசிரியர் ஒருவர் உட்பட ஐந்து பேர் கொண்ட தொழிநுட்ப மதிப்பீட்டு குழுவில் (Technical Evaluation Committee) உறுப்பினராக மேலதிக நியமனத்தையும் பெற்றுள்ளார்.
திருகோணமலை மாவட்ட தோப்பூர் பிரதேச அல்ஹம்றா மத்திய கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை தொடர்ந்த இவர் திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி, திருகோணமலை ஸ்ரீ-கோணேஸ்வரா இந்து கல்லூரி, ஸாஹிறா கல்லூரி மற்றும் சென்-ஜோசப்ஸ் கல்லூரிகளின் பழைய மாணவராவார்.
ஆரம்பமாக அம்பாறை ஹாடி பொறியியல் கல்லூரியில் படித்து பொறியியல்துறையில் பட்டம் பெற்ற இவர் கொழும்பு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்திலும்(UNIVOTEC) மேற்படிப்பை தொடர்ந்தார்.
கடந்த காலங்களில் மூதூர் பிரதேச செயலகம், சேருவில நீர்வழங்கள் வேலைதிட்டத்தில் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு அதிகார சபை மற்றும் கொழும்பு உயர் அடுக்குமாடி வேலைத்திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றியதுடன் அண்மையில் 'ஜவாஸன் குறூப்' எனும் பொறியியல் நிறுவனத்தினையும் உருவாக்கினார்.
இவர் பொறியியல்துறை மட்டுமல்லாமல் இலக்கியம், ஊடகம்,  சமூக சேவைகள், கற்பித்தல் ஆகிய துறைகளிலும் அதிக ஈடுபாடு கொண்டவராவார்.
12 வயதில் தினகரன், நவமணி, விஜய், Funday Times பத்திரிகைகளின் எழுத்தாளராக இருந்ததுடன் புதுமைச்சேடன் எனும் புனைப்பெயரில் பல கவிதை, கட்டுரைகளை படைத்துள்ளார். இவரது சில ஆக்கங்கள் சாகித்ய விழா சான்றிதழ்களையும் பெற்றுள்ளன. 'வளர்மதி' எனும் இவரது கவிதை தொகுதி நூலுருப்பெறாத ஆக்கமாகும்.
மிகவும் இளம் வயதில் தேசிய பத்திரிகைகளில் பணியாற்றிய இவரது சாதனை இன்றும் முறியடிக்கப்படாத ஒன்றாகும்.
13 வயதில் இவரது ஊடகத்துறை பிரவேசமானது மிக ஆச்சரியமானது.
விஜய் பத்திரிகையில் இளம் செய்தியாளராக, Funday Times இல் Kids Reporter ஆக ஊடக பயணத்தை ஆரம்பித்து 14 வயதில் தேசிய பத்திரிகையான வீரகேசரியில்  பல செய்திகளை எழுதியுள்ளார். இவர் 113 செய்திகள் எழுதியும் பிரசுரமாகாமல் இவரது 114 ஆவது செய்தியே முதல் முறையாக வீரகேசரியின் இரண்டாம் பக்கத்தில் பிரசுரமாகியது இவரது தொடர் முயற்சிக்கு சிறந்த சான்றாகும். தொடர்ந்தும் வீரகேசரி, மெட்ரோ நியூஸ், நவமணி, விஜய், Funday Times, Sunday Observer, අපේ ලෝකය(மும்மொழி சஞ்சிகை) ஆகியவற்றில் பல வருடங்களாக நிருபராக கடமையாற்றியதுடன் தற்போதும் சிறிதளவான தொடர்பை பேணி வருகிறார்.
13 வயதில் இவர் உருவாக்கிய சேர்ஃப்-லங்கா (Serf-Lanka) எனும் சமூக சேவைக்கான அமைப்பு இப்போது அரச அங்கீகாரம் பெற்ற அரச சார்பற்ற நிறுவனமாக செயற்படுகிறது. இந்த நிறுவனத்தின் ஊடாக பொறியியலாளர் இஹ்ஸான் ஜவாஸன் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை மாணவர்கள், ஏழைகள், மீனவர்கள், அநாதைகள், விதவைகள், முதியவர்களுக்காக முன்னெடுப்பது மிகவும் அர்ப்பணிப்புள்ள விடயமாகும்.
கற்பித்தலும் கூட இவரது ஈடுபாட்டின் ஒரு அங்கமாகும். கணித, விஞ்ஞான பாடத்தை கருத்தரங்குகள் மூலமாக தபால் மூலமாக நாடு பூராக கற்பித்து சுமார் பதினைந்தாயிரம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்துள்ளார். சுய கற்றலை ஊக்குவிக்கும் இவரது கற்பித்தலானது மாணவர்கள் மத்தியில் பல வரவேற்பை பெற்றதாகும்.
பொறியியல், இலக்கியம், ஊடகம், கற்பித்தல், சமூக சேவைகள், சமூக ஆய்வு ஆகிய பல துறைகளிலும் ஈடுபாடுள்ள பொறியியலாளர் இஹ்ஸான் ஜவாஸன் தோப்பூர் ஜவாஹிர் நளீமி மற்றும் பர்ஸானா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராவார்.