முச்சக்கரவண்டி மீது மரம் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்தததில் இருவர் உயிரிழப்பு


(க.கிஷாந்தன்)
உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடபுஸ்ஸலாவ கொட்டம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் படுங்காயமடைந்து உடபுஸ்ஸலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து 05.11.2018 அன்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராகலையிலிருந்து கொட்டம்பே பகுதிக்கு சென்று அங்கிருந்து, உள் வீதியினூடாக கல்கொட்டுவ கருடாகல நோக்கி செல்லும் வேளையில், குறித்த முச்சக்கரவண்டி மீது மரத்துடன் கூடிய கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் முச்சக்கரவண்டியில் பயணித்த 5 பேர் படுங்காயங்களுடன் உடபுஸ்ஸலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடபுஸ்ஸலாவ மஸ்பன்ன பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நிஷாந்த ஜெயகொடி மற்றும் 28 வயதுடைய சுசில் குமார ஜெயகொடி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக உடபுஸ்ஸலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடபுஸ்ஸலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.