"மஹிந்த, கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க மாட்டார்"


மஹிந்த ராஜபக்ஸவின் தயவில் வரும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அவரது மனைவி சிராந்தி ராஜபக்ஸ என தான் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் உயர் பீட உறுப்பினர் கே.டீ. லால் காந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸவை வேட்பாளராக நியமித்தால் மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் செல்வாக்கு நிறைவுக்கு வரும். கோட்டாப ராஜபக்ஸ வெற்றி பெறுவதாக வைத்துக் கொண்டால், நாமல் ராஜபக்ஸவின் அரசியல் கனவு இல்லாமல் போகும். ஏனெனில், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகவும் கோட்டாபய ராஜபக்ஸவே செல்வார். இது தவிர்க்க முடியாது.
மஹிந்த ராஜபக்ஸ கோட்டாபய ராஜபக்ஸதான் வேட்பாளர் என்பதை ஏன் இதுவரையில் கூறவில்லை? ஏன் இன்னும் அவர் வேட்பாளரை அறிவிப்பதில் இழுத்தடித்து வருகின்றார்.
இதனால், கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஸ அறிவிக்க மாட்டார் என்பதை நான் மிகவும் உறுதியாக நம்புகின்றேன் எனவும் லால் காந்த மேலும் கூறியுள்ளார்.