வடக்கு-கிழக்கை காட்டி நிதிகளை பெற்று தெற்கில் அபிவிருத்தி


வடக்கு-கிழக்கு மாகாணங்களை இனம் காட்டி சர்வதேசத்திடம் இருந்து நிதிகளை பெற்றுக் கொண்டு தெற்கில் உள்ள ஏனைய மாகாணங்களை அபிவிருத்தி செய்துள்ள வரலாறு தான் கடந்த கால அரசாங்கத்தின் வரலாறு என கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். 

மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசியபாடசாலையில் அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதி திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

எதுவாக இருந்தாலும் இறுதி யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த கடந்த அரசாங்கம் இறுதியின் போது மாகாணங்களை இனம் கண்டு அவர்களுக்கான அபிவிருத்தியை உரிய முறையில் செய்து கொடுக்கவில்லை . 

வடக்கு-கிழக்கு மாகாணங்களை இனம் காட்டி சர்வதேசத்திடம் இருந்து நிதிகளை பெற்றுக் கொண்டு தெற்கில் உள்ள ஏனைய மாகாணங்களை அபிவிருத்தி செய்துள்ள வரலாறு தான் கடந்த கால அரசாங்கத்தின் வரலாறு. 

இது எங்களுக்கு ஒரு பாடமாக இருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் நாம் யாரை தெரிவு செய்யப் போகின்றோம். யாரினூடாக எமது கல்வியை வளர்க்கப் போகின்றோம் என்கின்ற சிந்திக்கக் கூடிய நிலையை கடந்த கால அரசாங்கம் இன்று எங்களுக்கு உருவாக்கித்தந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பாடசாலைகளை பார்த்தால் இன்று எத்தனையோ பாடசாலைகள் மர நிழல்களிலும், ஓலைக் கொட்டில்களிலும் தளபாடம் இன்றி நிலத்தில் இருந்தும் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது. 

கடந்த காலங்களில் பல்வேறு திட்டங்களை இழந்து இன்று நாம் ஒரு மட்டத்தில் நிற்கின்றோம். இதற்கு சந்தர்ப்ப சூழ்நிலையும் ஒரு காரணம். முஸ்ஸிம் சகோதர மக்கள் இன்றும் வேறு இடங்களில் இடம் பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 

அவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டும். குறிப்பாக சொந்த இடமான யாழ் மாவட்டம், மன்னார் மாவட்டத்திற்கு மீண்டும் திரும்பி வர வேண்டும். மீள் குடியேற வேண்டும். 

அதற்கான முழு வரப்பிரசாரத்தையும் எங்களுடைய அரசாங்கம் இந்த மாவட்டத்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு வழங்கியுள்ளது. 

முஸ்ஸிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கான அனைத்து பொறுப்பும் பிரதமர் அவர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது என்றார். 

(மன்னார் நிருபர் லெம்பட்)