நீர்கொழும்பு சம்பவம் போதையில் இருந்த சிலரினால் ஏற்பட்டதாகும்


நீர்கொழும்பு, கொச்சிக்கடை, போருதொட்ட பகுதிகளில் நேற்று இடம்பெற்ற சம்பவம் மதுபோதையில் இருந்த சிலரினால் ஏற்பட்ட சம்பவம் ஆகும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார். 

தற்பொழுது இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார். 

நேற்றைய தினம் மாலை நீர்கொழும்பு, கொச்சிக்கடை, போருதொட்ட பொலிஸ் பிரிவுகளில் இந்த சம்பவம் பதிவானது. இரண்டு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய் தகராறு இதற்கு காரணமாகும். இந்த சம்பவத்தின் போது கூடுதலான மதுபானம் அருந்தியிருந்த மற்றுமொறு குழுவினர் சம்பவத்தில் தலையீடு செய்தனர். இந்த தலையீட்டை அடுத்து இங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது. 

பொலிஸார் உடனடியாக செயற்பட்டனர். இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தத்தை தடுக்க முடிந்தது. பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி சிலவற்றுக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை. கையால் தாக்கப்பட்ட சம்வங்கள் இடம்பெற்றுள்ளன. இதை தொடர்ந்தே சிறு முறைபாடு பதிவானது. கடந்த சில தினங்களில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது வாள் கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக நேற்றைய சம்பவத்தின் போது கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. தொடர்ந்தும் இவ்வாறான தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. 

நேற்றைய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். போதையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட நபர்கள் சிலரின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்க முடியும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)