பூஜித், ஹேமசிறியின் பிணையை எதிர்த்து சட்டமா அதிபரால் மீள் பரிசீலனை மனு தாக்கல்


பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமையை எதிர்த்து சட்டமா அதிபரால் மீள் பரிசீலனை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவினால் இன்று பிணை வழங்கப்பட்டது. 

இருவரையும் 5 இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்வதாக நீதவான் உத்தரவிட்டார். 

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு தவறியக் குற்றச்சாட்டின் கீழ், அவர்களை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தி இருந்தார். 

அதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் கடந்த 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.