ட்விட்டரில் உருகும் ரசிகர்கள்-''ஓய்வு பெறாதீர்கள் தோனி''


மகேந்திர சிங் தோனி நேற்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரை இறுதி ஆட்டத்தில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அத்துடன் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.
38 வயது தோனிக்கு இந்தப் போட்டியே உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் கடைசி போட்டியாக அமையும் எனக் கூறப்படுகிறது.
நேற்றைய போட்டியில் தோனி அவுட் ஆனதும் அவர் ஓய்வு பெறக்கூடும் என இந்திய ஊடகங்களும் இந்திய ரசிகர்களும் பதிவிட்டு வந்தனர்.
தோனி இந்திய அணிக்கு ஆற்றிய பணிகள் குறித்து பல்வேறு நபர்கள் காணொளிகள், மீம்கள் வாயிலாக உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் "Dont Retire Dhoni" எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது
அதேபோல #DhoniForever எனும் ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆகி வருகிறது.
''பில்லியன் மக்களின் கனவை பூர்த்தி செய்தவர். எங்களை விட்டுப் போகாதீர்கள் தோனி'' என அஞ்சு என்பவர் பதிவு செய்திருக்கிறார்.
தோனி ஓய்வு பெறக்கூடாது என இந்தியாவின் பிரபல மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
தோனிபடத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR
'' நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் எனது கணக்கை துவங்கினேன். நான் பதிவிடும் முதல் ட்வீட் இதுதான். பில்லியன் கணக்கான மக்களின் இதயமான ஒருவருக்காக நான் இங்கே வந்திருக்கிறேன். தயவு செய்து டி20 உலகக்கோப்பை வரை அணியில் இருங்கள் தோனி. இந்தியாவுக்கு நீங்கள் தேவை'' என பதிவிட்டிருக்கிறார் பிரேம் குமார்.
''நான் இந்தக் காணொளியை பார்க்கும்போது திரும்ப திரும்ப அழுகிறேன்'' என பதிவிட்டு தோனி நேற்று அவுட் ஆன பிறகு பெவிலியன் திரும்பிய காணொளியை பகிர்ந்திருக்கிறார் மொஹம்மத் ஷாருக்.
'' நாங்கள் உங்களை இப்படிப்பார்க்க விரும்புகிறோம் தல தோனி. ஓய்வு பெறாதீர்கள்'' என பதிவிட்டுள்ளார் சையத் வஹீத்
''நான் தோனியை அதிகளவு வெறுப்பனவாக இருந்தேன், அவரை கேலி செய்பவனாக இருந்தேன். இப்போது என் இதயத்திலிருந்து சொல்கிறேன். எங்களுக்கு நீங்கள் வேண்டும் தோனி'' என அனுஜ் என்பவர் பதிவிட்டிருக்கிறார்.
'' இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாதீர்கள். உங்களை இன்னும் கொஞ்சம் நாட்கள் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்'' என்கிறார் மது
''நீங்கள் எங்களை எப்போதும் பெருமை கொள்ளச் செய்தீர்கள். நாங்கள் உங்களது அமைதியையும் தன்னம்பிக்கையையும் பாராட்டுகிறோம். வயதின் அடிப்படையில் ஒருவரை மதிப்பிடுவதை நிறுத்துங்கள். இன்னமும் அவர் ஃபினிஷர். தயவு செய்து அடுத்த டி20 உலகக்கோப்பை வரை நாட்டுக்கு சேவை செய்யுங்கள்'' என விகாஸ் சிங் என்பவர் பதிவிட்டிருக்கிறார்.
'' உங்களிடம் இன்னமும் ஏராளமான கிரிக்கெட் மீதமிருக்கிறது. எங்களது நாட்டிற்கு நிறைய போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க நீங்கள் தேவை'' என சரவணகுமார் ஏழுமலை எனும் நேயர் பதிவிட்டிருக்கிறார்.
''எனக்கு எப்போதுமே தோனி தலைவர்தான்'' என தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார்.
"நீங்கள் மீண்டும் விளையாடுவீர்களா என்பது தெரியாது. ஆனால், கிரிக்கெட்டுக்காக நீங்கள் நிறைய கொடுத்துள்ளீர்கள். உங்கள் சுய நம்பிக்கையையும், அமைதியையும் கண்டு நான் வியந்திருக்கிறேன்." என தோனி குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் ட்வீட் செய்துள்ளார்.
நேற்றைய போட்டியில் என்ன நடந்தது?
2019 உலகக்கோப்பையின் அரை இறுதிப்போட்டியில் நான்காவது ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.
விராட் கோலி, ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல் என பிரதான பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததும் ரிஷப் பந்துடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.
திணறிக்கொண்டே இருந்த தினேஷ் கார்த்திக் 10-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அற்புதமான ஒரு கேட்ச் மூலம் தினேஷ் கார்த்திக்கை பெவிலியன் அனுப்பினார் நீஷம்.
4 விக்கெட்டுகள் இழந்தும் தோனி களமிறங்கவில்லை. மாறாக ஹர்திக் பாண்ட்யா ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இந்த இணை கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்தது. ஆனால் 23-வது ஓவரில் பிரிந்தது.
இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்திருந்தபோதுதான் தோனி களமிறங்கினார்.
தோனி - ஹர்திக் பாண்ட்யா இணை 7 ஓவர்களில் வீழ்ந்தது.
அதன்பின்னர் ஜடேஜாவும் தோனியும் இணைந்து இந்தியாவை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டனர்.
ஜடேஜா அதிரடியாக ஆட அவருக்கு பக்க பலமாக ஆடினார் தோனி.
இந்த இணை 116 ரன்களை குவித்தது. ஜடேஜா 77 ரன்கள் எடுத்தார்.
தோனிபடத்தின் காப்புரிமைOLI SCARFF
ஆட்டத்தின் 49-வது ஓவரில் மூன்றாவது பந்தில் தோனி அவுட் ஆனார். அத்துடன் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.
தோனி 72 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்
தோனி ஏன் முன்கூட்டி இறங்கவில்லை என சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.
இந்நிலையில் போட்டி முடிந்து விராட் கோலி நிருபர்களுக்கு பதிலளித்தார். அப்போது தோனியின் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் அவர் களமிறக்கப்பட்ட விதம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தோனியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசும்போது ''ஜடேஜா ஒருமுனையில் நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார். ஒரு விக்கெட் விழுந்தாலும் புவனேஷ்வர் குமார் முதலான பந்துவீச்சாளர்கள்தான் களமிறங்க முடியும் என்ற நிலை. அந்த சூழலில் ஜடேஜாவுக்கு ஏற்றபடி தோனி சிறப்பான பங்களிப்பை வழங்கினார் என்பதே என் கருத்து'' என்றார் கோலி
'' தோனி கடைசி சில ஓவர்களில் இறங்கி ரன்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதே அவருக்கான வேலை. சூழலுக்கு தகுந்தவாறு அவரை வெவ்வேறு இடத்தில் களமிறக்க முடிவு செய்திருந்தோம். இந்த போட்டியில் தோனிக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் அவர் ஏழாம் நிலையில் களமிறங்கி ரன்களை சேர்க்க வேண்டும் என்பதே'' என இந்திய அணித் தலைவர் விராட் கோலி கூறினார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் எட்டு இன்னிங்ஸ்களில் களமிறங்கிய தோனி 45.5 எனும் சராசரியோடு 273 ரன்களை குவித்தார். இரு போட்டிகளில் அவர் அரை சதம் எடுத்தார்.
அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளார்.
இதுவரை 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10773 ரன்கள் குவித்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி.