நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானிக்கும் சக்தியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம்


பாறுக் ஷிஹான்
பாறுக் ஷிஹான்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து அரசின் நிலைப்பாட்டை பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை நாவிதவெளி பிரதேசத்திலுள்ள சொறிக்கல்முனை ஹோலி குறோஸ் வித்தியாலய வீதியை தார் வீதியாக புனரமைப்பதற்கான ஆரம்ப  நிகழ்வில் பிரதம அதிதியாககலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வானது  ஞாயிற்றுக்கிழமை  (07)  காலை  நாவிதன்வெளி பிரதேச சபையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அந்தோனி சுதர்சன் தலைமையில்  இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

 இந்த நாட்டின் அரசுக்கெதிராக கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவழிப்பதா?எதிர்ப்பதா?  என்ற பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாகிய நாங்கள் பலதரப்பட்ட அழுத்தங்களை கொடுக்கவிருக்கின்றோம். விஷேடமாக கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்படுகின்ற விடயத்தில் காத்திரமான அழுத்தத்தை இந்த அரசுக்கு கொடுத்து  நம்பிக்கையில்லா பிரேரணையில் ஆதரவு வழங்குவதா இல்லையா என கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்ந்த விடயமே தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கின்றது.கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்ந்த பிரச்சினைகளை தாண்டி வடகிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளையும் எடுத்துக்கூறி அவற்றையும் நடைமுறைப்படுத்தாமல் இந்த அரசு தவிர்க்குமானால் அரசுக்கெதிராக சில நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.

விஷேடமாக நாங்கள் உரிமை சார்ந்த விடயங்களை முன்னெடுக்கின்ற அதே வேளை அபிவிருத்தி சார்ந்த விடையங்களையும் சமகாலத்தில் மேற்கொண்டுவருகிறோம். நாங்கள் ஒருபோதும் மாற்றினத்திற்கோ மாற்று சமூகத்திற்கோ ஆண்டான் அடிமையாக இருக்க முடியாது. தமிழர்கள் வீரத்தோடு பிறந்தவர்கள் தமிழ்த்தேசியத்தின்மீதும் தமிழின் மீதும் பற்றுறுதிகொண்டவர்களாக எப்போதும் இருக்க வேண்டும் என இந்த நிகழ்வின்போது வலியுறுத்தினார்.மேலும் சொறிக்கல்முனை, மத்தியமுகாம் பிரதேசங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கீட்டில் இடம்பெற்ற வேலைத்திட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில்  அருட்சகோதரர் இக்னேஷியஸ், அருட்சகோதரிகள்,நாடாளுன்ற உறுப்பினரின் செயலாளர் டி.சுரேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர்.