தேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற லொறி விபத்து


(க.கிஷாந்தன்)

மாவனெல்ல பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு 10 டொண் தேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று அகரகந்தை பகுதியில் அமைந்துள்ள நீர் மின் உற்பத்தி நிலைய கட்டிடத்தின் மீது விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

தலவாக்கலை - டயகம பிரதான வீதியில் அகரகந்தை பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

05.08.2019 அன்று காலை 9.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக லிந்துலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். எதிரே வந்த மோட்டர் சைக்கிள் ஒன்றிற்கு இடமளிக்கும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மோட்டர் சைக்கிளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, அதன் சாரதி சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

குறித்த லொறியில் இருந்த தேயிலை கழிவு பைகளை  பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். 

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.