மண்சரிவு


(க.கிஷாந்தன்)

நாவலப்பிட்டி கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் 8ம் இலக்க லயன் தொடர் குடியிருப்பின் பின்புறத்தில் 13.08.2019 அன்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக இக்குடியிருப்புகளில் வசித்து வந்த 75 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள்  கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக இவர்கள் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை தோட்ட அதிகாரியாலும், பிரதேச செயலகத்தினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.