ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஓரிரு தினத்தில் நியமிப்போம்


(க.கிஷாந்தன்)
ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயக ரீதியில் செயல்படும் ஒரு கட்சி ஆகும். அந்த வகையில் குடும்ப ஆட்சியை கொண்டு நடத்தாத ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விரும்ப கூடிய அல்லது மக்கள் ஆதரிக்க கூடிய ஒரு வேட்பாளரை நிறுத்தும். அதற்கான சுப நேரம் ஓரிரு தினங்களில் வரும். அதன்போது வேட்பாளரை நாம் நியமிப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
கினிகத்தேனை மினுவான்தெனிய இட்டிகேகம, உடபொல்கஸ்வத்த ஊடாக தெரணியகல செல்லும் பிரதான வீதியை காபட் வீதியாக செப்பணிட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு 29.08.2019 அன்று மினுவான்தெனிய பகுதியில் இடம்பெற்றது.
சுமார் 8 கிலோ மீற்றர் கொண்ட இந்த காபட் வீதிக்கு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிப்பதில் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்த அவர், தாம் வேட்பாளராக வர வேண்டும் என கட்சியை சார்ந்த ஐவர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் எவரை ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விரும்புகின்றார்களோ அவர்களை வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சி நிறுத்தும் எனவும் தெரிவித்தார்.
அதேநேரத்தில் சில கட்சிகள் தற்போது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்திருந்தாலும், இது தொடர்பாக ஏனையவர்களிடம் கலந்தாலோசனை செய்யாது நிறுத்தியுள்ளனர். ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஜனநாயகத்தை பின்பற்ற கூடிய நிலை உள்ளதால் அவசரப்பட தேவையில்லாமல் வேட்பாளர் ஒருவரை நியமிக்க கட்சியின் கொள்கைக்கு ஏற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இந்த நாட்டை 20 வருட ஆட்சியை கொண்டு செலுத்திய சிலர் இப்போது நாட்டை எம்மிடம் தாருங்கள் என கேட்கின்றனர். ஆனால் கடந்த காலங்களில் இவர்கள் நாட்டு மக்களின் பொதுவான பிரச்சினைகளை கூட முறையாக தீர்க்கவில்லை. இந்த நிலையில் நாட்டை ஆளக்கூடிய பொறுப்பை மக்கள் எம்மிடம் வழங்கினர். நாம் இந்த பொறுப்பை ஏற்கும் பொழுது நாடு கடன் சுமை, குப்பை மற்றும் சைட்டம் தொடர்பான ஆகிய பிரச்சினைகளுடன் பொறுப்பேற்றோம்.
நல்லாட்சி என்ற வகையில் நாம் செயல்பட்டிருந்த போதிலும் கடந்த 6 மாத காலமாக தனியான அமைச்சரவை அந்தஸ்துடன் செயல்பட்டு வருகின்றோம். ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டை பொறுப்பேற்ற பின் இதுவரை 6,500 கோடி ரூபாய் கடன் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் 4000 கோடி ரூபாய் கடன் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் அவர்கள் முன்னெடுத்த பணிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த நிலையில் எம்மை ஆட்சியினை கொண்டு செலுத்த முடியாமல் காலால் எட்டி உதைத்தார்கள். எமக்கு எதிராக நம்பிகையில்லா பிரேரரணைகளை கொண்டு வந்தார்கள். மக்களை தூண்டி விட்டு போராட்டங்களை நடத்தினார்கள்.
இவை அனைத்தையும் எதிர் கொண்டு ஆட்சியை நடத்தி வருகின்றோம். எமது ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலப்பகுதியில் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதிகள் வழங்கப்பட்டுள்ளது. சமூர்த்தி உதவி பெறுபவர்களுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரதமர் தலைமையில் தொழில் வாய்ப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக நாட்டை முன்னெடுத்து செல்ல பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.