மட்டக்களப்பில்.கொள்ளையர்கள் 5 பேரும் விளக்கமறியலில்


மட்டக்களப்பு நகர் பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் வீடு உடைக்கும் ஆயதங்களுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 5 பேரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் நேற்று (27) உத்தரவிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவு முச்சக்கரவண்டி ஒன்றில் வைத்து பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளைக் கோஷ்டியினைச் சேர்ந்த 5 பேரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து மைக்கிரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று 5 கையடக்க தொலைபேசிகள், வீடு உடைக்கும் கூரிய ஆயுதங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட இவர்களை பொலிஸ் தடுப்பு விசாரணை சட்டத்தின் கீழ் 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது.

இதன்போது இவர்கள் பங்குடாவெளி, கல்லடி, கள்ளியங்காடு. இலுப்படிச்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஆயுதக்குழுக்களில் இருந்தவர்கள் எனவும் இவர்கள் களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு நகர் பிரதேசங்களில் 7 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது

இதனையடுத்து குறித்த கொள்ளையர்களும் நேற்று (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டதையடுத்து அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

(மட்டக்களப்பு நிருபர் சரவணன்)