பதவி விலகிய தலைமை நீதிபதி நீதிமன்றத்திற்கு வரவில்லை; வழக்குகள் மாற்றம்


சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்த தாஹில்ரமானி இன்று நீதிமன்றத்திற்கு வராத நிலையில், அவருக்குப் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் இரண்டாவது அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.
சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்த தாஹில்ரமானியை சமீபத்தில் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இதனை மறுபரிசீலனை செய்யுமாறு தாஹில் ரமானி கோரினார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே. மிட்டல் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தனது அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருந்தபோதும், திங்கட்கிழமையன்று 75 வழக்குகள் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு வராத நிலையில், அந்த வழக்குகள் வினீத் கோத்தாரி மற்றும் சரவணன் அடங்கிய இரண்டாவது அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.