அன்பை பரப்புங்கள் !


(க.கிஷாந்தன்)
அன்பை பரப்புங்கள் என்ற தொனிப்பொருளில் கொட்டகலை நகரில் 25.09.2019 அன்று விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்போம் போன்ற சிறுவர் உரிமைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
கொட்டகலை புகையிரத கடவைக்கு முன்பாக ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் கொட்டகலை பிரதேச சபை வரை முன்னெடுக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் கொட்டகலை பகுதியை சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலை மாணவர்கள் 1000 பேர் உள்ளடங்கிய ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், பத்தனை பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுவர் உரிமை தொடர்பில் கோஷங்கள் எழுப்பிய வண்ணம், சிறுவர்களுக்கு அன்பு காட்டாதவர் எங்களை சார்ந்தவர்கள் அல்ல, உலகின் உன்னத படைப்பு சிறுவர்கள், சிறார்களை ஒருபோதும் சீரழிக்க வேண்டாம், சாதிக்க பிறந்த சிறுவர்களை சோதிக்காதே போன்ற பதாதைகளையும் ஏந்திய வண்ணம் சென்றமையை காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் கூட்டம் ஒன்றும் கொட்டகலை பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.