மட்டக்களப்பில் 9 நாடுகளின் பல்கலைக் கழகப் பிரதிநிதிகள்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போருக்கு முன்னரான நிலைமையும் தற்போது காணப்படுகின்ற நிலைமையினையும் அறிந்து கொள்வதற்காக டோகா பல்கலைகழக உயர்பட்ட படிப்பினை மேற்கொள்கின்ற 9 நாடுகளைச் சேர்ந்த 16 பிரதி நிதிகள் நேற்று (20.10.2019) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு 9.30 மணியளவில் வருகை தந்திருந்தனர்.
இதன்போது போர்க்கால நிலவரம் மற்றும் தற்கால அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் மற்றும் திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் எஸ்.அமுதலிங்கம்; குழுவினர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
டோகா பல்கலைக்கழகத்தில் மீள் கட்டுமானத்துறை, வர்த்தக வியாபார தொழில்நுட்பத்துறை மற்றும் அரசியல் விஞ்ஞான துறைகளில் கலாநிதி பட்டத்தினை பெறுவதற்காக கல்வியினை கற்று வருகின்ற குழுவினரின் பணிப்பாளர் சுல்தான் பரகத் அவர்களும் அத்தோடு கொழும்பு பல்கலைகழகத்தின் உயர்தர பிரிவின் விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ் அஸிஸ் அவர்களும் இச்சந்திப்பின் போது, மத்தியகிழக்கு நாடுகள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கான சவால்கள் முன்னிறுத்தி நாட்டினை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்கின்ற செயல்திட்டத்தினை போன்று இலங்கையையும் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களிலும் நிகழ்கின்ற தடைகளை நிவர்த்தி செய்து எவ்வாறு அபிவிருத்தியினை முன்னெடுத்து செல்வது தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது எவ்வாறான உதவித்திட்டங்கள் மக்களுக்கு அவசியப்படுகின்றது என்பது தொடர்பாகவும் மீள்குடியேற்றப்படுவதற்கு எவ்வாறாக புறக்காரணிகள் தடையாக இருந்து வருகின்றது அதற்காக எவ்வாறு தீர்வுகள் வழங்கலாம் என்பது பற்றி விரிவாக ஆராயப்பட்டது. இந்த நிகழ்வில் டோகா பல்கலைகழகத்தில் கல்வி கற்றுவருகின்ற பாகிஸ்தான், லிவியா , மொராக், இந்தோனேசியா கட்டார் சிரியா இலங்கை போன்ற நாடுகளில் உயர் கற்கை நெறியினை கற்றுவருகின்ற மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.