அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டாரா?


இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதிக்கு எதிராக அமெரிக்கா ராணுவம் தாக்குதலைத் தொடங்கி உள்ளதென அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அரசு இன்னும் இதனை உறுதிப்படுத்தாத சூழலில், பாக்தாதி கொல்லப்பட்டார் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முக்கிய தகவலை வெளியிடுவார் என வெள்ளை மாளிகை தரப்பு கூறுகிறது.
வடமேற்கு சிரியாவில் சனிக்கிழமை அமெரிக்கப் படை அபுபக்கர் அல்-பாக்தாதியைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர், தாக்குதல் நடந்தது உண்மைதான் ஆனால் பாக்தாதி கொல்லப்பட்டாரா? என இன்னும் உறுதி செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு டிரம்ப் இது தொடர்பாக ஓர் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.

யார் இந்த பாக்தாதி?

சர்வதேச அளவில் அதிகம் தேடப்படும் நபர் அபுபக்கர் அல்-பாக்தாதி.
தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் விலை அறிவிக்கப்பட்ட பாக்தாதி எங்கே இருக்கிறார் என்பது பெரும் மர்மமாகவே இருந்து வந்தது.
ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டாரா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பே பொறுப்பேற்றது.
மற்ற ஜிஹாதித் தலைவர்களைப் போலல்லாமல் பாக்தாதி, மிக அதிகத் தேவை இருந்தால் மட்டுமே பொதுவெளியில் தோன்றவோ அல்லது பேசவோ செய்திருக்கிறார். கலிஃபகம் அமைந்த அறிவிப்பை வெளியிடும்போது மற்றும் மொசூல் நகரைக் காக்க தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தபோது போன்ற சந்தர்ப்பங்கள் ஒரு உதாரணம்.
இஸ்லாமிய அரசு குழுவின் தலைமை வரிசையில் , உயரச் செல்லச் செல்ல, மேலிருப்பவர்களுடன் தொடர்பு என்பது அவர்களுக்கு விசுவாசமான சொற்ப எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
எனவே, பாக்தாதி எங்கிருக்கிறார் என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
இதுதான், அவரை வலைவீசித் தேட சிறப்புப் படைகளை உருவாக்கியிருக்கும் அமெரிக்காவுக்கு, அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிவதைக் கடினமாக்கியது.