பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வுபெறும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கௌரவித்து பிரியாவிடை வழங்கும் வைபவம் சனிக்கிழமை(12) மாலை கல்முனை பொலிஸ் நிலைய வளாகத்தில் கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தனவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரியபண்டார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள், உதவி பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பொலிஸ் சேவையில் கடமையாற்றி ஓய்வு பெறும் பொலிஸ் சாஜன்ட்களான நிஜாமுடீன், தங்கராசா மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மன்சூர் ஆகியோரை கௌரவித்து பிரியாவிடை வழங்கும் வைபவத்தில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரியபண்டார உரையாற்றும் போது,
பொலிஸ் சேவையில் தங்களை அர்ப்பணித்து கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள், உயிரை பணயம் வைத்து சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களை கௌரவித்து பிரியாவிடை வழங்கும் கடப்பாடு எம் அனைவருக்கும் உண்டு. மேலும் இந்த கௌரவிப்பு நிகழ்வானது கல்முனை பிராந்திய பொலிஸ் நிலையத்தில் நடைபெறுவது இதுவே முதற்தடவை என்றும் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இவ்வாரான பிரியாவிடை வைபவங்கள் நடாத்தி இவ்வாறானவர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் ஓய்வு பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பொலிஸ் சேவையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
Post a Comment
Post a Comment