"தேர்தல் காலங்கள் வந்தால் தீர்த்தக்கரை வியாபாரிகளாக முஸ்லீம் தலைமைகள்"


பாறுக் ஷிஹான்

தேர்தல் காலங்கள் வந்தால் தீர்த்தக்கரை வியாபாரிகளாக முஸ்லீம் தலைமைகள் மாறிவிடுகின்றனர் இதனால் தான் அமைச்சர் ரிஷாட் பதியுதீனாக இருந்தாலும் சரி அமைச்சர் ரவூப் ஹக்கீமாக இருந்தாலும் சரி அவர்கள் செய்யாத குற்றங்களுக்கு மாட்டிக்கொள்வது என்பது இறைவனின் தண்டனையாகும் என   முன்னாள் அமைச்சரும்இ தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று புதன்கிழமை(23) இரவு 9  மணியளவில் நிந்தவூர்  அட்டப்பளம் தனியார் விடுதியில்  முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மேலும் தெரிவித்ததாவது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது இலங்கையை பொருத்தமட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் நாட்டின் இறைமைமை  பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவரே நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும். அந்த வகையில் 30 வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்ந ராஜபக்ச குடும்பத்தின் ஒருவரே நாட்டிற்கு ஏற்ற ஜனாதிபதியாவார். அந்த வகையில் தேசிய காங்கிரஸான எமது கட்சி கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கின்றது. இன்று கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியானது சிங்கள மக்கள் மத்தியில் 72 தொடக்கம் 80 வீதமான வாக்குகளை பெற்று வெற்றிபெருவது உறுதியாக உள்ளது. இந்த வெற்றியில் முஸ்லிம்களாகிய நாமும் பங்காளர்களாக வேண்டும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கை தவிர்ந்து ஏனைய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதியை தெரிவுசெய்யும் விடயத்தில் நிதானமாக உள்ளனர். அவர்களது மனநிலைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோ  அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ மாற்ற முடியாது.

குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் தேர்தல் காலங்கள் வந்தால் தீர்த்தக்கரை வியாபாரிகளாக தான் காணப்படுகின்றனர். வியாபாரம் முடிந்தவுடன் கடையை அப்படியே தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள் மீண்டும் அடுத்த முறை அதே கடையுடன் தான் வருவார்கள். இவர்கள் முஸ்லிம் மக்களை தங்களது சொந்த இலாபங்களுக்காக கரிவேப்பிலையாக பயன்படுத்துகின்றனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனாக இருந்தாலும் சரி அமைச்சர் ரவூப் ஹக்கீமாக இருந்தாலும் சரி அவர்கள் செய்யாத குற்றங்களுக்கு மாட்டிக்கொள்வது என்பது இறைவனின் தண்டனையே ஆகும். இவர்கள் இன்று முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காக என்ன திட்டம் வைத்துள்ளனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு சிறந்தது என நானும் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபும் கூறியுள்ளோம். ஆனால் இந்த நிறைவேற்று அதிகார முறைமை மாற்றப்பட வேண்டும் என உறுதியாய் இருந்தவர்கள் தான் எமது இந்த முஸ்லிம் அமைச்சர்கள். தொடர்சியாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி தோல்வி கண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தடவையும் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதனாலே இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கியுள்ளார். சஜித் பிரேமதாசவினால் குச்சிப்பெட்டி போன்ற வீடுகளை கட்டிக்கொடுக்க முடியமே தவிர நாட்டை பாதுகாக்க முடியாது. ஏனென்றால் தான் ஜனாதிபதியாக வந்தால் பாதுகாப்பு சம்மந்தமான அனைத்தையும் சரத் பொன்சேகாவிடம் கையளிப்பேன் என்று கூறியுள்ளார். ஜனாதிபதியின் கீழ் வருகின்ற பாதுகாப்பு அமைச்சை தன்னால் மேற்கொள்ள முடியாது என்ற நிலையானது அவரது தோல்வியை உறுதிப்படுத்துகின்றது.

மேலும் அவரது கருத்தில் மக்கள் யாரும் கோத்தபாய ராஜபக்சவை கண்டு பயப்படவில்லை  இந்த முஸ்லிம் பிரதிநிதிகள் தான் மக்கள் மத்தியில் பயத்தை வரவழைக்கின்றனர். நமது நாட்டின் தலையெழுத்து மாற்றப்பட வேண்டும். 2015ல்  நல்லாட்சியை உருவாக்குவதற்கு 100 வீதம் பாடுபட்டு மறக்க முடியாத ஆட்சியை உறுவாக்கியதற்கான பங்கு முஸ்லிம் மக்களுக்கு உண்டு. பெரும்பான்மை மக்கள் மத்தியிலும்   தமிழ் மக்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் நன்றி கெட்டவர்கள் தொப்பி பிரட்டிகள் என நகையாடப்படுகின்றனர். இந்த நிலைமையை நாம் மாற்ற வேண்டும். ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸின் சிரேஷ்ட அங்கத்தவராகிய நாங்கள் ரவூப் ஹக்கீமை நாட்டுக்காகஇ மக்களுக்காக செயற்படக்கூடியவர் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கினோம். ஆனால் அவரது செயற்பாடுகள் பிழையானதால் தான் நாங்கள் அந்த கட்சியை விட்டு ஒதுங்கினோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அளுத்கமை சம்பவத்தை தொடர்ந்து மக்கள் முன்னைய ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை எடுத்தனர். ஆனால் இது அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்த தீர்மானம் அல்ல. தேர்தல் நிலைமை மாறுகின்ற சந்தர்பத்தில் மாட்டு வண்டிக்கு கீழால் செல்லும் நாய் போல ஆட்சியமைக்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்றார் .

மேலும் இன்று அமைச்சர் ரிசாட்  நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பில் என்னை சம்பந்தப்படுத்தி பேசியுள்ளார்.ஆனால் அவருக்கு அதன்  அகலம் நீளம் கூட  தெரியாது.நான் இதை தடுப்பது பற்றி  ஜனாதிபதி மைத்திரியிடம் பேசுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என உறுதிபட தெரிவிக்க விரும்புகின்றேன்.என்னுடைய பிரதேச மக்களின் பிரச்சினை இது. எனது பிரதேச மக்கள் வாழவேண்டிய பூமிஇ அக்கரைப்பற்று பிரதேசத்தின் காணி அது. அதனால் எனக்கு நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தின் அகலஇநீளம் அதாவுல்லாஹ்வாகிய  தெரியும். அமைச்சர் றிஸாத்தின் சொந்த பிரதேச பிரச்சினைகளே அவருக்கு தெரியாது  (சிரிக்கிறார்)

கடந்தவாரம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் றிசாத்இ சவூதி அரேபிய நிதியில் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் மக்கள் பாவனைக்கு வழங்கப்படாத நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க விடாமல் ஜனாதிபதியிடம் பேசி தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்  தடுப்பதாக குற்றம் சாட்டிய கருத்திற்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்  பயங்கரவாத செயலில் ஈடுபட்ட இப்ராஹிமும் அவருடைய மகன்மாரும் அமைச்சர் றிசாத் அவர்களுடனே தான் இருந்தார்கள். அவர்களையே அறியாத அவருக்கு அவர்களினால் இயக்கப்பட்ட செம்பு தொழிற்சாலையை அறியாத அவருக்கு நுரைசோலையை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிச்சைக்காரனின் புண்ணைப்போல அவருக்கு இந்த பிரச்சினை இப்போது தலைக்கு வந்துள்ளது.தொடந்தும் நாங்கள் ஏனைய முஸ்லிம் கட்சிகளை போல அல்லாது கடந்த காலங்களில் மஹிந்த அரசில் முன்வைத்த மூன்று கோரிக்கைகளில் வடகிழக்கு பிரிப்பும்இ யுத்த முடிவும் நிறைவடைந்துள்ளது மீதமாக இருக்கும் சகல இலங்கை மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய யாப்பை உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்னிறுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன வேட்பாளர் கோத்தாபாயவை ஆதரிக்கிறோம்.

கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்தியில் செத்து கிடப்பார் என்றோம் அது நடந்திருக்கிறது, வடக்கையும் கிழக்கையும் பிரிக்க வேண்டும் என்றோம் பிரிந்தது,உலகமே நம்பாத மஹிந்த-மைத்திரி இணைவை பற்றி பேசினோம். எங்களுக்கு தலைகழண்டுவிட்டது. பைத்தியம் பிடித்துவிட்டது  இதுவெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை என்றார்கள். காலம் அவர்களுக்கு பதிலளித்தது போல எங்களுடைய இப்போதைய கோரிக்கைகளும் வெல்லும்  என குறிப்பிட்டார்.