அட்டாளைச்சேனையில், கோழி லொறி விபத்து


விற்பனைக்காக கோழிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக கென்டர் வாகனம் இன்று(15) அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மரமொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்று பகுதியினை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனம்  இன்று காலை 5.15 மணியளவில் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியின் அட்டாளைச்சேனை சதோச விற்பனை நிலையத்திற்கு முன்னால் இருந்த மரமொன்றில் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 
இவ்விபத்தின் மூலம் மூவர் பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளதுடன், வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 500 கோழிகள் இறந்துள்ளன.
இவ்விபத்தின் மூலம் வானத்தில் பயணித்த மூவரில் இருவர் பலத்த காயங்களுக்கு இலக்காகிய போதிலும் அவ்வாகனத்தின் சாரதி சேதமடைந்த வாகனத்தின் பாகத்தின் அகப்பட்டமையால் அவரை மீட்டெடுக்கும் முயற்சியில் சில மணி நேரம் மக்கள் போராடியும் முடியாமல் போனதையடுத்து கனரக வாகனத்தின் உதவியுடன் சாரதி மீட்கப்பட்டார். 
இவ்வாறு மீட்கப்பட்ட சாரதி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இன்று(15) காலை மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வாகனத்தில் பயணித்தவர்கள் ஏறாவூர் மீச்நகர்ப் பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என்றும் அஸீஸ் அஹமட் றூஹுல்லா(29), எஸ்.யூசூப்(37) ஆகியோர் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலத்த காயங்களுக்கு இலக்காகிய சாரதி ஏறாவூர் - 02, மீச்நகரினைச் சேர்ந்த 30 வயதுடைய ஜுனடை றிஸாத் எனவும் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தினை வேகமாக செலுத்தி வந்த சாரதி கட்டுப்பாடடினை இழந்தமையால் இவ்விபத்து நிகழ்ந்தாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாகனத்தில் ஏற்றிச் சென்ற கோழிகளில் சுமார் 500 கோழிகள் விபத்தின் மூலம் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேகக் கட்டுப்பாட்டினை இழந்த வாகனம் பாதையோரத்தில் இருந்த பெரிய மரமொன்றில் மோதுண்டதனால் வாகனம் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. இவ்வாகனம் மரத்தின் அடிப்பகுதியில் புகுந்தமையால் வானத்தின் முன்பகுதி நசுக்கப்பட்டமையால் சாரதியின் இடுப்பின் கீழ் பகுதி பலத்த காயங்களுக்கு இலக்காகி உடற்பாகத்தில் உடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.