ஆசிரியரை கொலை செய்த 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு மரண தண்டனை




ஆசிரியர் ஒருவரை துன்புறுத்தி கொலை செய்த குற்றத்திற்காக 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு சூடான் நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது.
அந்நாட்டின் அதிபர் ஒமர் அல்-பஷீர் அரசாங்கத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 36 வயதான அஹமத் அல்-கைர் கைது செய்யப்பட்டார். காவலில் எடுக்கப்பட்ட அவர், கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.
சூடானின் கிழக்கு பகுதியில் உள்ள கஸாலா என்ற மாநிலத்தில் உள்ள தடுப்பு காவல் மையத்தில் அஹமத் அல்-கைர் அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டது நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது.
29 புலனாய்வு அதிகாரிகளுக்கும் தண்டனை அறிவித்த நீதிபதி, உயிரிழந்த அல்-கைரின் சகோதரரிடம், அவர்களை மன்னிக்க விரும்புகிறீர்களா அல்லது அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அந்த சகோதரர், 29 பேரையும் தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.