ஷஹித் அஃப்ரிடி,மகள் 'ஆரத்தி' எடுத்ததால் தொலைக்காட்சியை உடைத்தார்


இந்திய தொலைக்காட்சி தொடர் ஒன்றை பார்த்து, அதேபோல் வீட்டில் ஆரத்தி எடுப்பது போன்ற பாவனையை தன் மகள் மேற்கொண்டதால் கோபமடைந்த முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, வீட்டில் உள்ள தொலைக்காட்சியை உடைத்து விட்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
தனது இந்த செய்கையை அஃப்ரிடி ஒப்புக்கொண்ட காணொளி ஒன்று, அண்மையில் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலனது. இது மிகவும் சர்ச்சையை உருவாக்கியுள்ளதையும் அந்த செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த காணொளியில் நிகழ்ச்சியை நடத்தும் தொகுப்பாளர், அஃப்ரிடியிடம் எப்போதாவது அவர் வீட்டில் உள்ள தொலைக்காட்சியை உடைத்ததுண்டா என்று வினவினார். அதற்கு பதிலளித்த அஃப்ரிடி, ''என் மனைவியால் ஒருமுறை அவ்வாறு நடந்தது. ஸ்டார்பிளஸ் சானலில் வெளியாகும் தொடர்கள் மிகவும் பிரபலமாக உள்ளதால் பலரும் இங்கு அதை பார்ப்பதுண்டு'' என்று நினைவுகூர்ந்தார்.
''இந்த தொலைக்காட்சி தொடர்களை தனியாக பார்க்குமாறு என் மனைவியிடம் பலமுறை நான் கூறியுள்ளேன். குழந்தைகளுடன் இந்த தொடர்களை பார்க்காதே என்று கூறியதையும் மீறி, அவர் என் குழந்தைகளுடன் இந்த தொடரை பார்த்தாள். அப்போது என் மகள் ஒரு தொடரில் காட்டப்படுவது போல ஆரத்தி செய்வது போல் பாவனை செய்தாள். இதனால் கோபமடைந்த நான் தொலைக்காட்சியை உடைத்துவிட்டேன் என்று கூறினார்.
இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிவருகிறது.