வலையில் சிக்கிய அபூர்வ எலி பூச்சி நண்டுl


புதுச்சேரி மூர்த்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் கலைஞானம் வலையில் சிக்கிய அபூர்வ கடல் எலியை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். புதுச்சேரி மூர்த்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் கலைஞானம். இவர் வழக்கம்போல் சக மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். மீன் பிடித்துவிட்டு கரை திரும்பியதும், வலையில் இருக்கும் மீன்களை வெளியே எடுக்கும் போது நண்டு போன்று வித்தியாசமான தோற்றம் கொண்ட உயிரினம் சிக்கியிருப்பதை கண்டு ஆச்சார்யமாக பார்த்தார்.

சக மீனவர்களிடம் இதனை காட்டி கேட்டபோது, அது அரியவகை எலி பூச்சி என்பது தெரியவந்தது. வழக்கமான எலி பூச்சி 10 முதல் 50 கிராம் எடை மட்டுமே இருக்கும். கலைஞானம் வலையில் சிக்கிய எலி பூச்சியின் எடை சுமார் ஒரு கிலோ வரை எடை இருந்தது. மருத்துவ குணம்கொண்ட இந்த எலி பூச்சியை ஏலம் விட்டால் சுமார் 5 ஆயிரம் வரை விலை போக வாய்ப்புள்ளது. ஆனால், இந்த எலி பூச்சியின் மருத்துவ குணத்தால் அதனை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு விட்டதாக கலைஞானம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், நிலத்தில் உள்ள எலியைப் போன்று தோற்றமளிக்கும் இந்த வினோத கடல் உயிரினம், நண்டு வகையைச் சேர்ந்த மச்ச நண்டு என அழைக்கப்படுகிறது. இதன் உயிரியியல் பெயர் எமிரிட்டா ஆசியாடிக்கா.
 உள்நாட்டு மீனவர்கள் இதை கடல் எலி, கடல் பூச்சி என்று அழைக்கின்றனர். இவை பின்னோக்கி நகரும் தன்மை கொண்டவை. இதன் ஓட்டின் அளவு 3.5 மி.மீட்டர் வளர்ந்த பிறகு, ஆண் தன்மை மறைந்து, பெண் இனமாக மாறும் தன்மை உண்டு. இதனை சமைத்து சாப்பிடுவதை விட நேரடியாக அடுப்பு தனலில் நேரடியாக சுட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்றனர்.