தனிமைப்படுத்தப்பட்டனர்




வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வெளி மாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஒன்பது பேர், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் திங்கட்கிழமை (13) தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நபர்கள், வெளி மாவட்டங்களில் உள்ள அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று மீண்டும் சொந்த இருப்பிடத்தை நோக்கி வந்த போதே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தவர்களில் நால்வர் அம்பாறை - அக்கரைப்பற்று பிரதேசத்திலும் ஏனையவர்கள் யாழ்ப்பாணம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஐ. இன்பராஜா தலைமையில், பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.நௌஷாட், கே. சோபனகாந்தன் ஆகியோரால், மேற்படி நபர்களின் உடல் நிலையைப் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தியுள்ளனர்.