#ரோபோடிக் இயந்திரம் வழங்கி வைப்பு


காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் கோவிட்19 நோயாளர் சிகிச்சை நிலையத்திற்கான தானியங்கி ரோபோடிக் இயந்திரம் வழங்கி வைப்பு

(எம்.எஸ்.எம். நூர்தீன்)

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் கோவிட்19 நோயாளர் சிகிச்சை


நிலையத்திற்கான தானியங்கி ரோபோடிக் இயந்திரம் ஒன்று அட்லஸ் அக்சிலா நிறுவனத்தின் அனுசரனையில் நேற்று (03) புதன்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டன.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் சிலாபம் இரனவில கோவிட்19 சிகிச்சை நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு வைத்திய உத்தியோகத்தருமான திமுத் பொன்வீர அவர்களின் ஒருங்கிணைப்பின் அடிப்படையிலும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் அவர்களின் அனுமதியுடனும் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ. அச்சுதன் பிராந்திய சுகாதார பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சசிகுமார், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எச்.எம்.ஏ.மௌஜுத், அட்லஸ் அக்சில் நிறுவனத்தின் முகாமைத்துவ பொறியியலாளர் டயான் உட்பட அவரது குழுவும் வைத்தியசாலையின் வைத்தியர், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து  கொண்டனர்.

இந்த ரோபோடிக் இயந்திரத்தின் மூலம் சுகாதார சேவை பணியாளர்களின் உயர் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படுவதுடன், கெவிட் 19 நோயாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் அபாய நிலையைக் குறைப்பதற்கும் வழிவகுக்கும்.

அத்தோடு நோயாளர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்து வகைகளை நோயாளர்களின் காலடிக்கே கொண்டு வழங்குவதற்கும் நோயாளர்கள் வைத்தியர்களுடனும் ஏனைய உத்தியோகத்தர்களுடனும் தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வீடியோ கலந்துரையாடல் மூலம் பெற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.