பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவிற்கு கொரோனா வைரஸ் தொற்று


உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. திங்கள் வரை அங்கு 16 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்ட பிறகு அவருக்கு நேற்று (திங்கட்கிழமை) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு மூன்று முறை பொல்சனாரூவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

''கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு சாதாரண காய்ச்சல் போன்றதுதான்" என்று கூறிவந்த பொல்சனாரூ, தனக்கு கொரோனா வைரசால் எந்த பாதிப்பும் இல்லை என முன்பு கூறினார்.

கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் பிரேசிலில் தீவிரமாகச் சென்றுகொண்டிருந்தபோது, சமூக விலகல் அறிவுரைகளை கிடப்பில் போட்டுவிட்டு, தனது ஆதரவாளர்களுடன் தலைநகர் பிரேசிலியாவில் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையைக் கிளப்பியது.


இதுமட்டுமின்றி, தொடக்கத்திலிருந்தே முடக்க நிலைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்த பொல்சனாரூ, சமூக முடக்கம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும் என்று வாதிட்டார்.

இது தொடர்பாகக் கடந்த மார்ச் மாதம் நடந்த மாகாண ஆளுநர்களுடனான கூட்டத்தில் பேசிய அவர், "நமது வாழ்க்கை தொடர்ந்து நடக்க வேண்டும். வேலைகளை பாதுகாக்க வேண்டும். நாம் கண்டிப்பாக இயல்புநிலைக்குச் சென்றே தீர வேண்டும்," என்று கூறினார்.

மேலும் மாஸ்க் அணிவதையும் தவித்து வந்த பொல்சனாரூ, பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் தோன்றி வந்தார்.