உற்சாக வரவேற்பு


(க.கிஷாந்தன்)

 

நுவரெலியா மாவட்டத்துக்கு (21.07.2020) வருகைதந்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

 

அத்துடன், பொதுமக்களுடன் சிநேகப்பூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

 

2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி மாவட்டந்தோறும் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

 

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று களப்பயணம் மேற்கொண்டிருந்தார்.  இதனடிப்படையில் ஹங்குராங்கெத்த, வலப்பனை, கந்தபளை, நுவரெலியா, கொத்மலை, தலவாக்கலை, கொட்டகலை, நோர்வூட், மஸ்கெலியா,  ஆகிய பகுதிகளுக்கு ஜனாதிபதி சென்றிருந்தார்.

 

அந்தவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், மாவட்டத்தின் வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் கொட்டகலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார கூட்டத்தில், சர்வமத வழிபாட்டில் பங்கேற்ற பின்னர், மக்களை சந்திப்பதற்கு சென்றார்.

 

கொட்டகலை நகரை அண்மித்த பகுதயில் சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி மக்கள் திரண்டிருந்தனர். ஜனாதிபதியை கண்டதும் ‘ஜனாதிபதி வாழ்க, ஜனாதிபதி வாழ்க’ என கோஷம் எழுப்பி தமது ஆதரவை வெளிப்படுத்தி - வரவேற்பளித்தனர்.

 

இதன்பின்னர் பலர் ஜனாதிபதியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துகொண்டனர். மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

 

இந்த பிரச்சார கூட்டங்களில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான ஜீவன் தொண்டமான், ராமேஷ்வரன், கணபதி கனகராஜ், சக்திவேல், பிலிப்குமார், சுப்பையா சதாசிவம், முத்தையா பிரபு, பெரியசாமி பிரதீபன்,  எஸ்.பி.திசாநாயக்க, சீ.பீ.ரத்நாயக்க, நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.