யோகி ஆட்சியமைத்தது முதல் அலிகரில் புதிய மதரஸாக்கள் அனுமதிக்கப்படவில்லை


 


இந்தியா உத்திரப்பிரதேசத்தில்  பாஜக தலைமையில் ஆட்சி அமைத்தது முதல் அலிகர் மாவட்டத்தில்  புதிய மதரஸாகள் துவக்கப்படவில்லை எனத் தெரிந்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தின் மதரஸாக்கள் அனைத்தும் பொதுக்கல்வியின் பள்ளிகளாக மாற்றப்படும் என அங்கு ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதிலும் மதரஸாக்கள் மீதான சர்சைகள் கிளம்பியுள்ளன.

குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் உபியின் அலிகரில் மதரஸாக்கள் வருடந்தோறும் புதிதாக துவக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இங்கு பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சியில் மாயாவதி முதல்வராக இருந்த போது, 31 மதரஸாக்கள் அலிகரில் துவக்கப்பட்டன.

இவருக்கு பின் ஆட்சிக்கு வந்த சமாஜ்வாதியில் அகிலேஷ்சிங் யாதவ் அரசிலும் அதை விட அதிகமான மதரஸாக்கள் அலிகரில் துவங்கின. ஆனால், கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின் இங்கு புதிதாக ஒரு மதரஸா கூடத் துவக்கப்படவில்லை.

இதற்கு அலிகரில் மதரஸாக்கள் புதிதாகத் துவக்க முதல்வர் யோகி அரசு அனுமதிக்கவில்லை எனக் கருதப்படுகிறது. அலிகரில் மொத்தம் 121 மதரஸாக்கள் உள்ளன.

இதில், அரசு உதவி பெறும் நான்கு மதரஸாக்களில் சுமார் 20,000 மாணவர்கள் பயில்கின்றனர். மீதம் உள்ளவற்றில் 33 மதரஸாக்கள் நவீன பள்ளி மாற்றம் திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.

இந்த நவீன பள்ளிகள் மாற்றம் திட்டத்தின் மதரஸாக்களுக்கும் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி கிடைக்கிறது. இதர மதரஸாக்கள் தனியாரால் நடத்தப்படுகின்றன.

உபி முழுவதிலும் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்களில் பயிலும் மாணவர்களுக்கு அலிகர் பல்கலைகழகத்தில் இணைந்து உயர் கல்வி பயிலும் வாய்ப்புகள் உள்ளன.

இதற்காக, மத்திய அரசின் அப்பல்கலைகழகத்தில் ‘பிரிஜ் கோர்ஸ்’ எனும் பெயரில் ஒரு குறுகியக் காலப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு தங்கள் பட்டப்படிப்புகளை ஆங்கிலம் உள்ளிட்ட பாடத்துறைகளில் இணைந்து பயில வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக உபியில் மதரஸா கல்விக்கு இஸ்லாமியர்கள் இடையே மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால், உபியில் மட்டும் மிகவும் அதிகமாக சுமார் 8000 மதரஸாக்கள் உள்ளன.

இவற்றில் சுமார் 600 மதரஸாக்களுக்கு உபி அரசு நிதி உதவி அளித்து வருகிறது. உபியில் முதல்வர் யோகி அரசு அமைந்தது முதல் மதரஸாக்கள் மீது தீவிர கண்காணிப்பு செலுத்தப்பட்டு வருகிறது.

இவை அனைத்திற்கும் மதரஸா கல்வி தொடர்பான சில விளக்கங்கள் கேட்டு உபியின் சிறுபான்மை நலத்துறை கடிதம் அனுப்பியது. இதில் திருப்தியான பதில் கிடைக்காத 29 மதரஸாக்களில் நேரடியாக அரசு அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டிருந்தது.

இதில், 17 மதரஸாக்கள் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் இன்றி, பெயரளவில் நடைபெற்று வந்தது கண்டறியப்பட்டது. பிறகு அவற்றின் பதிவுகளையும் ரத்து செய்தது. இத்துடன் 2012 முதல் 2017 வரையில் அந்த 17 மதரஸாக்கள் பெற்ற மானியத்தை திரும்பப் பெறுவும் உத்தரவிட்டிருந்தது நினைகூரத்தக்கது